Published : 27 Jan 2018 09:41 AM
Last Updated : 27 Jan 2018 09:41 AM

ராஜஸ்தானில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்ட நாதுராம் மற்றும் கூட்டாளிகள் புழல் சிறையில் அடைப்பு

கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை தனிப்படை போலீஸார் ராஜஸ்தானில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்துள்ளனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளைக்குப் பிறகு, ராஜஸ்தான் தப்பிவிட்ட கொள்ளையன் நாதுராமைப் பிடிக்க சென்னை போலீஸ் படை சென்றிருந்தது. பாலி மாவட்டத்தில் ஜெய்தாரன் பகுதியில் உள்ள ராமாவாஸ் கிராமத்தில் தன் நண்பர் தேஜாராமின் பண்ணை வீட்டில் நாதுராம் பதுங்கி இருந்தார். இந்த வீட்டை டிசம்பர் 12-ல் சென்னை தனிப்படை போலீஸார் முற்றுகையிட்டனர்.

இதில், நாதுராம் தம் மனைவி மஞ்சு மற்றும் சக கொள்ளையன் தீபாராம் ஜாட் ஆகியோருடன் அங்கிருந்து தப்பிவிட்டார். வீட்டில் இருந்தோர் நடத் திய தாக்குதலில் இருந்து தப்ப, ஆய்வாளர் டி.எம்.முனிசேகர் உட்பட நான்கு காவலர்கள் சுவர் ஏறிக் குதித்தனர். தாக்குதலில் சிக்கிய மற்றொரு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் வெளியே வரும்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

வழக்கில் புதிய திருப்பம்

இது முனிசேகர் கைத்துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு என்பதால், அவ்வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. இதனால், நாதுராமைப் பிடிப்பதில் ராஜஸ்தான் போலீஸார் தீவிரம் காட்டினர். இதன் பலனாக நாதுராம், கடந்த 13-ம் தேதி குஜராத்தில் கைது செய்யப் பட்டார்.

தனது விசாரணையில் எடுத்த ஜெய்தாரன் காவல் நிலையத்தினர், இவரை தொடர்ந்து 5 நாள் வைத்திருந்தனர். பின் ஜெய்தாரன் சிறையில் நாதுராம் அடைக்கப்பட்டார். இந்தத் தகவல் சென்னை போலீஸாருக்கும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் எச்.எம்.ஜெயராம் தலைமையிலான தனிப்படை போலீஸார் விமானம் மூலம் ராஜஸ்தான் சென்றனர்.

கொளத்தூர் நகைக் கடை கொள்ளை வழக்கு தொடர்பான பிடி ஆணையை ஜெய்தாரன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதையடுத்து ஜெய்தாரன் சிறையில் இருந்த நாதுராம் மற்றும் அவரது 2 கூட்டாளிகளும் ராஜஸ்தான் காவல்துறையினரால் சென்னை தனிப்படை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சென்னை அனுப்ப அனுமதி

அதன்படி கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் விசாரணை நடத்த நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகளான தினேஷ் சவுத்ரி, புத்தாராம் ஆகியோரை சென்னைக்கு அனுப்ப ராஜஸ்தான் போலீஸார் அனுமதி வழங்கினர்.

அதன்படி அவர்கள் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு ராஜஸ்தானில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டனர். பின்னர் எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து நாதுராம், தினேஷ் சவுத்ரி, புத்தாராம் ஆகியோரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து, விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகள் தற்போது நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆய்வாளர் பெரியபாண்டி சுடப்பட்டது குறித்தும் முழு விபரங்கள் வெளியாகலாம் எனவும் கூறப்படு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x