Published : 23 Jan 2018 10:37 AM
Last Updated : 23 Jan 2018 10:37 AM

திருமணத்தை பதிவு செய்யாவிட்டாலும் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

திருமணம் பதிவு செய்யப்படாவிட்டாலும் மனைவிக்கு கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஜெயகுமாரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

எனக்கும் ஸ்டீபன் என்பவருக்கும் கடந்த 2005-ல் திருமணம் நடைபெற்றது. பின்னர் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. 2010-ல் என்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். பெற்றோர் வீட்டில் தங்கினேன். என் கணவரிடம் மாதம் ரூ.20 ஆயிரம் ஜீவனாம்சம் கேட்டு 2013-ல் மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நாங்கள் இருவரும் வெவ்வேறு மதம் மற்றும் ஜாதியை சேர்ந்தவர்கள். திருமணத்தை பதிவு செய்யவில்லை. இதனால் ஜீவனாம்சம் வழங்க வேண்டியதில்லை. திருமணம் செல்லாது என அறிவிக்கக்கோரி கணவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையேற்று எங்கள் திருமணம் செல்லாது என அறிவித்து, ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து குடும்ப நல நீதிமன்றம் 7.4.2016-ல் உத்தரவிட்டது

எங்களின் திருமணம் சிறப்பு திருமணச் சட்டப்படி பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் 2005 ஜனவரி முதல் 2010 நவம்பர் வரை இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளோம். எனவே, குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார். இந்த வழக்கில் நீதிபதி நேற்று பிறப்பித்த உத்தரவு:

வெவ்வேறு மதத்தை சேர்ந்த மனுதாரரும் அவரது கணவரும் தங்களின் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யவில்லை என்பது உண்மைதான். அதே நேரத்தில் இருவரும் 5 ஆண்டுகளுக்கு மேல் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர்.

சிறப்பு திருமணச் சட்டப்படி திருமணம் பதிவு செய்யப்படாததால் மனுதாரருக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கீழமை நீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்தது சட்டப்படி சரியானது அல்ல. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-வது பிரிவின்கீழ் ஜீவனாம்சம் பெறுவதற்கு திருமணம் பதிவு செய்யவில்லை என்பது ஒரு தடையல்ல. திருமணத்தை பதிவு செய்யவில்லை என்பதற்காக ஜீவனாம்சம் வழங்க மறுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது.

மனுதாரரை பராமரிக்கவும், அவரது தேவைகளை நிறைவேற்றவும் அவரது கணவர் தவறிவிட்டார். பெண்ணுக்கு வாழ்க்கை நடத்துவதற்கு உணவு, மருத்துவம் மற்றும் அடிப்படை தேவைகள் உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூ.8,000 ஸ்டீபன் வழங்க வேண்டும். மனுதாரருக்கு அவர் மனு தாக்கல் செய்த 22.3.2013 முதல் 7.4.2016 வரையுள்ள ஜீவனாம்ச தொகையை 3 மாதத்தில் கணவர் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x