Published : 30 Jan 2018 04:09 PM
Last Updated : 30 Jan 2018 04:09 PM
கொளத்தூர் நகைக்கடை கொள்ளை, இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட நாதுராமை 10 நாள் போலீஸார் காவலில் விசாரிக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கொளத்தூர் முகேஷ் என்பவருக்கு சொந்தமான நகைக் கடையில் கடந்த நவம்பர் மாதம் 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, 2 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக போலீஸார் உடனடியாக 4 பேரை கைது செய்தனர். மேலும் கொள்ளையில் சம்பந்தப்பட்ட நாதுராம் (38), தினேஷ் சௌத்ரி (23), பத்தாராம் (21) உள்ளிட்டோர் ராஜஸ்தானுக்கு தப்பி விட்டனர்.
அவர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், முனிசேகர் தலைமையில் சென்ற தனிப்படை நாதுராமை பிடிக்கும் முயற்சியில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொல்லப்பட்டார். அவரை சுட்டது யார் என்பது குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகிறது.
இந்நிலையில் தினேஷ் சௌத்ரி டிசம்பர் 25 அன்று கைது செய்யப்பட்டார். பலமாதங்கள் தலைமறைவுக்கு பிறகு நாதுராம் கடந்த ஜனவரி 14 அன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிடிபட்டார். பத்தாராம் ஜனவரி 25-ம் தேதி பிடிபட்டார்.
மூவரும் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்த்ரான் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களை சென்னை போலீஸார் தங்கள் காவலில் எடுத்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மூவரிடமும் கொள்ளை வழக்கு குறித்தும், பெரிய பாண்டியன் கொலை குறித்தும், நகைகளை கைப்பற்றுவது குறித்தும் விசாரிக்க ஏதுவாக 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி ராஜமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் எழும்பூர் 13-வது நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாதுராம் உள்ளிட்டோர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
போலீஸாரின் மனுவை நீதித்துறை நடுவர் கோபிநாத் விசாரித்து 10 நாள் நீதிமன்ற காவல் வழங்க உத்தரவிட்டார். இதன்படி இன்று முதல் பிப்ரவரி 8-ம் தேதி வரை போலீஸ் காவலில் நாதுராம் விசாரிக்கப்படுவார்.
அன்று மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT