Published : 03 Jan 2018 12:19 PM
Last Updated : 03 Jan 2018 12:19 PM
இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ள தமிழக மாணவர் எம்.சின்னகண்ணனுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு" என்ற தலைப்பில், ஈரோடு மாணவர் எம்.சின்னகண்ணன் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டு, அந்த மாணவனுக்கு "இளம் விஞ்ஞானி" விருதும், பரிசும் வழங்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவர் சின்னகண்ணனுக்கு எனது பாராட்டையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆய்வுக்கட்டுரை, மார்ச் மாதம் மணிப்பூரில் நடைபெறவிருக்கும் இந்திய அறிவியல் மாநாட்டுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
கொங்காடை குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் படித்து வரும் எம்.சின்னகண்ணன் நிகழ்த்தியுள்ள இந்த சாதனை, தமிழக மாணவ - மாணவியருக்கு மிகுந்த உற்சாகமும், உந்துசக்தியும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை" எனக் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிச.27 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடத்திய இந்த மாநாட்டை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் 30 மாநிலங்களில் இருந்தும், 6 ஆசிய நாடுகளில் இருந்தும் இளம் விஞ்ஞானிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து முப்பது ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில், 2 ஆய்வுகள் மட்டும் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டன.
இதில், ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதி குழந்தைத் தொழிலாளர் சிறப்புப்பள்ளி மாணவர்களின், “மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்ற தலைப்பிலான ஆய்வுக்கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT