Published : 01 Dec 2023 05:18 AM
Last Updated : 01 Dec 2023 05:18 AM

பேரவைச் செயலருக்கு 3 ஆண்டு பணி நீட்டிப்பு: முதன்மைச் செயலராக பதவி உயர்வு

சென்னை: சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசன் நேற்றுடன் ஓய்வுபெற்ற நிலையில், அவருக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்புடன் முதன்மை செயலராக பதவி நிலையை உயர்த்தியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை செயலராக இருப்பவர் கி.சீனிவாசன். முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவை செயலராக இருந்த ஜமாலுதீன் பணி ஓய்வைத் தொடர்ந்து, அதே ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை செயலராக பூபதி நியமிக்கப்பட்டார்.

அவர் 2018-ம் ஆண்டு பிப். 28-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, அப்போதைய சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபாலின் தனி செயலராக இருந்த கி.சீனிவாசன் பேரவைச் செயலராக நியமிக்கப்பட்டார்.

சட்டப்பேரவை செயலகத்தில் ஆசிரியர் பிரிவு மற்றும் நிர்வாகப் பணிப்பிரிவு என இரு பிரிவு இருக்கும் நிலையில், நிர்வாகப் பிரிவில் இருந்தே முன்னதாக பேரவை செயலர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.

சீனிவாசன் ஆசிரியர் பிரிவில் இருந்து நியமிக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. அதன்பின் நீதிமன்றம் வரை சென்று சீனிவாசன் செயலர் பதவியில் தொடர்ந்தார். இந்நிலையில், அவர் நேற்றுடன் ஓய்வு பெற்றார். தமிழக அரசு இதுவரை யாருக்கும் பணி நீட்டிப்பு வழங்காத நிலையில், இவருக்கும் பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்று கருதப்பட்டது.

ஆனால், அனுபவம், பேரவை நிகழ்வுகளை நடத்திச்செல்லும் பாங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீனிவாசனுக்கு பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி, அவர் ஓய்வுபெறும் நாளில் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கியும், பேரவைச்செயலர் பதவிக்கு பதில் பேரவையின் முதன்மைச்செயலர் அந்தஸ்துக்கு உயர்த்தியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல்வரிடம் வாழ்த்து: இந்நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சீனிவாசன், பணி நீட்டிப்பு, பதவி உயர்வுக்கான உத்தரவுடன், வாழ்த்தும் பெற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x