Published : 13 Jan 2018 10:25 AM
Last Updated : 13 Jan 2018 10:25 AM

மார்ச்சில் சந்திராயன்–2 விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தகவல்

வரும் மார்ச் மாதம் சந்திராயன் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.

பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறும்போது, “இஸ்ரோ தனது புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட்டின் வெற்றி இந்தியாவுக்கு இஸ்ரோ அளிக்கும் புத்தாண்டு பரிசாகக் கருதலாம். கடந்த ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் வெப்ப தகடு கோளாறால் தோல்வி அடைந்தது.

இருப்பினும், தோல்வி அடைந்தற்கான காரணத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆராய்ந்து, பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட்டை குறைகளின்றி உருவாக்கினர். அது வெற்றி அடைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளுக்கு ஒரே ராக்கெட் மூலம் பல்வேறு செயற்கைக்கோள்களை அனுப்பும் முயற்சியில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. இந்த ஆண்டில் இன்னும் பல ராக்கெட்களை அடுத்தடுத்து விண்ணில் ஏவ இஸ்ரோ தயார் நிலையில் உள்ளது. சந்திராயன்-2 விண் கலம் மார்ச் மாதம் விண் ணில் செலுத்தப்படும்” என்றார்.

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் கே.சிவன் கூறும்போது, “பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட்டின் வெற்றி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரதான தவறினால் பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் தோல்வி அடைந்தது. இருப்பினும், இஸ்ரோவின் மீது நம்பிக்கை வைத்து வெளிநாட்டு நுகர்வோர்கள் 28 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த கொடுத்தது பாராட்டுக்குரிய ஒன்று. இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பே இந்த வெற்றிக்குக் காரணம். சந்திராயன் – 2, ஜிஎஸ்எல்வி மார்க் -3 டி-2 ஆகிய ராக்கெட்களை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x