Published : 31 Jan 2018 11:55 AM
Last Updated : 31 Jan 2018 11:55 AM

திருப்பத்தூரில் ஆசிரியை தற்கொலை வழக்கு : முன்னாள் கவுன்சிலரை பிடிக்க பெங்களூரு விரைந்த தனிப் படையினர்

வீட்டை அபகரித்ததால் ஓய்வுபெற்ற ஆசிரியை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தற்கொலைக்கு காரணமானவரை கைது செய்யக் கோரி காவல் துறை அதிகாரிகளிடம், உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், பெங்களூருவில் பதுங்கியுள்ள முன்னாள் கவுன்சிலர் பாரத்தை பிடிக்க தனிப் படையினர் விரைந்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது :

திருப்பத்தூரில் ஓய்வுபெற்ற ஆசிரியை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவான நகராட்சி முன்னாள் கவுன்சிலரை பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கவுன்சிலரை கைது செய்யும் வரை ஆசிரியை உடலை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தார் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் பாலம்மாள் காலனியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் தயாநிதி (72). இவருக்கு ராஜகுமாரி (64), வனஜா (62) என 2 மனைவிகள் உள்ளனர். இதில், வனஜா ஓய்வுபெற்ற ஆசிரியை. இந் நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு தயாநிதி உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்பாக பாலம்மாள் காலனியில் வசித்து வந்த வீட்டை வனஜா பெயருக்கு எழுதிக் கொடுத்ததாக தெரிகிறது. இதையறிந்த முதல் மனைவி ராஜகுமாரி சொத்தில் பங்கு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் வனஜாவை காப்பாற்றுவதாக கூறி, திருப்பத்தூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் பாரத் என்பவர் ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை தனது பெயருக்கு பவர் பட்டா வாங்கியுள்ளார். பின்னர், அந்த வீட்டை பாரத் அபகரித்துக் கொண்டதாக வனஜா குற்றஞ்சாட்டினார்.

இந் நிலையில், நேற்று முன்தினம் வனஜா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, பாரத் தலைமறைவானார்.

இதுகுறித்து, திருப்பத்தூர் டவுன் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. பெங்களூர் பதுங்கியுள்ள பாரத்தை பிடிக்க தனிப் படையினர் விரைந்துள்ளனர்.

நேற்று மாலை பிரேதப் பரிசோதனை முடிந்து வனஜாவின் உடலை, அவரது மகள் அருண்மொழி தேவியிடம் காவல் துறையினர் ஒப்படைக்க முயன்றனர். ஆனால், உறவினர்கள் உடலை வாங்க மறுத்து காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், வனஜாவின் உறவினர்களிடம் பேச்சவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பின்னர், அவரது மகளிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

வனஜா எழுதிய கடிதம்

தற்கொலை செய்து கொண்டா வனஜா தனது மகளுக்கு எழுதிய கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றினர். அதில் கூறியிருப்பதாவது :

“என்னால் தான் இந்தளவுக்கு கஷ்டம் ஏற்பட்டது. இந்த பிரச்சினை தீர பல வகையில் போராடியும் நியாயம் கிடைக்கவில்லை. என்னால் வந்த பிரச்னைக்கு நானே முடிவுக்கு கொண்டு வர முடிவெடுத்து விட்டேன். இதை உன்னிடம் சொல்லாமல் முடிவெடித்து விட்டேன். இதன் மூலமாக நல்ல முடிவு வரும் என்று நம்புகிறேன், குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள், என்னை மன்னித்து விடு. இதற்கு முழு காரணம் கவுன்சிலர் பாரத் தான். முன்பு மனு தந்தது போலவே மனு அனுப்பியிருக்கிறேன், இப்படிக்கு வனஜா’ என்று எழுதியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x