“விஜயகாந்த் விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டும்” - இயக்குநர் அமீர்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை என்றும். அவருக்கு அடுத்த சில நாட்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என அவர் சிகிச்சை பெற்று வரும் சென்னை - மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டும் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. “திரையுலகின் நான் கண்ட நல்ல மனிதர்களில் முக்கியமானவரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக இல்லை என்ற தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்றேன்.

வாடிய பயிரை, பசியினால் இளைத்தோரை, பிணியால் வருந்துவோரை, ஏழைகளாய் உழல்வோரை கண்டுளம் பதைத்த வள்ளலாரைப் போல, நம்மிடையை திகழ்ந்த தன்னலமற்ற மனிதநேயப் பண்பாளரான அவர்,

‘இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள’, எனும் குறள் வழி வாழ்ந்த ‘ஈகைத் தமிழன்’ விஜயகாந்த் (கேப்டன்) விரைவில் பூரண உடல் நலம் பெற்று சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் தாளில் இறைஞ்சுகிறேன். அன்புடன், அமீர்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in