

புதுச்சேரி: மகளிர் ஊர்க்காவல் படையினருக்கு 6 மாத கால மகப்பேறு மருத்துவ விடுப்பு வழங்குவதற்கான அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். துணை நிலை ஆளுநர் தமிழிசை, நேற்று சில கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன் விவரம்: புதுச்சேரி அரசு, காவல்துறையில் பணிபுரியும் மகளிர் காவலர்களுக்கு ( Women Police Constables ) வழங்கப்படுவதைப் போல மகளிர் ஊர்க் காவல் படையினருக்கு ( Women Home Guards ) 6 மாத கால மகப்பேறு மருத்துவ விடுப்பு வழங்குவதற்கான அமைச்சரவையின் முடிவுக்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித் துள்ளார்.
இது தவிர, பட்ஜெட் உரையான 2021-22 மற்றும் 2023- 24 ல் முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்ததை போல பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் முதலீட்டு மானியம் மற்றும் இடு பொருள் மானியத்துக்கு பதிலாக பயிர் உற்பத்தி தொழில் நுட்பத் திட்டத்தின் கீழ் ( Crop Production Technology Scheme ) பயிர் சாகுபடி செலவு மானியம் (அ) உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கும் விதமாக நடைமுறையில் உள்ள விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, இயற்கை வேளாண்மை முறையில் பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 8 ஆயிரம் வீதம் சொர்ணவாரி மற்றும்சம்பா (அ) சம்பா மற்றும் நவரைஆகிய இரண்டு பருவ காலங்களுக்கு வழங்கப்படும். பயிர் வகைகள், எள் சாகுபடி மற்றும் சிறுதானியங்கள் சாகு படிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உற்பத்தி ஊக்கத் தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் தொகையுடன் இடுபொருள் மானியமாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.
கடலை சாகுபடிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உற்பத்தி ஊக்கத் தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் தொகையுடன் இடு பொருள் மானியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். நிலத்தின் ஊட்டச்சத்து மற்றும்வேளாண் உற்பத்தியை அதிகரிக்க, இயற்கை வேளாண் இடு பொருட்களான தழை உரம், மண்புழு உரம், ஜிப்சம் போன்றவை பொது விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்திலும் அட்டவணை இன விவசாயிகளுக்கு இலவசமாகவும் வழங்கப்படும்.
சாகுபடிக்குத் தேவையான நெல் விதைகள் பொது விவசாயிகளுக்கு கிலோ ரூ. 10 மானிய விலையிலும், அட்டவணை இன விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்திலும் வழங்கப்படும். இயற்கை உரங்கள், பூச்சுமருந்துகள், வேப்பம் புண்ணாக்கு ஆகியவை பொது விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்திலும் அட்டவணை இன விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியத்திலும் வழங்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.