

மதுரை: பரவையில் குடியிருப்புப் பகுதிக்குள் ராட்சச குழாய் பதிப்பதை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை பெரியாறு குடிநீர் திட்டத்துக்கு பரவை பேரூராட்சி மகாகணபதி நகரில் குடியிருப்புப் பகுதியில் ராட்சச குழாய் பதிக்கும் ஒப்பந்தகாரரை தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அக்கட்சியின் மாவட்ட கமிட்டி உறுப்பினர் வள்ளிமயில் தலைமை வகித்தார்.
உறுப்பினர் மங்கையர்க்கரசி முன்னிலை வகித்தார். மேலும், திட்ட மதிப்பீட்டில் குறித்தவாறு வைகைக் கரையோரம் ராட்சச குழாய்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள இழப்புகளை ஒப்பந்தகாரர், தமிழக அரசும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர்கள் காளிதாஸ் (புறநகர்), முருகன் (மாநகர்), தமிழ்தேச மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் ஆகியோர் பேசினர். இதில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சீனி முகமது, புரட்சிகர இளைஞர் முன்னணி குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.