Published : 01 Jan 2018 10:32 AM
Last Updated : 01 Jan 2018 10:32 AM
ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்திருப்பதால், தற்போது அதன் விலை கிலோ ரூ.5 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த தக்காளி உற்பத்தியில் 35 சதவீத உற்பத்தியுடன் ஆந்திர மாநிலம் முதலிடத்திலும், 10.44 சதவீத உற்பத்தியுடன் கர்நாடக மாநிலம் 2-ம் இடத்திலும், 3.45 சதவீத உற்பத்தியுடன் தமிழகம் 9-ம் இடத்திலும் உள்ளன. இதனால் தமிழகத்தில் தக்காளித் தேவையை, ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களே பூர்த்தி செய்து வருகின் றன.
அங்கு உற்பத்தி குறைந்தால், தமிழகத்தில் விலை உயர்வதும், அங்கு உற்பத்தி அதிகரிக்கும் போது தமிழகத்தில் விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது. தற்போது சென்னைக்கு தக்காளி வரத்து அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, கோயம்பேடு சந்தையில் அதன் விலை ரூ.5 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஜாம் பஜார் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.8 முதல் ரூ.12 வரை விற்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறையின் பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.12-க்கு விற்கப்பட்டு வருகிறது.
தக்காளி விலை வீழ்ச்சி அடைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:
தென் மாநிலங்களில் வறட்சி
கடந்த ஆண்டு தென் மாநிலங்களில் பருவமழை பொய்த்ததாலும், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வறட்சி நிலவியதாலும், ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தக்காளி சாகுபடி பரப்பு குறைந்து, கோயம்பேடு சந்தைக்கு வரத்தும் குறைந்தது. அதனால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி விலை கிலோ ரூ.50 வரை உயர்ந்திருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு அம்மாநிலங்களில் தென்மேற்குப் பருவ மழை அதிக அளவில் பெய்தது. சில மாதங்களுக்கு முன்பு தக்காளிக்கு நல்ல விலை கிடைத்த நிலையில், அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது. அதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து தற்போது அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 40 லோடாக இருந்த தக்காளி வரத்து, தற்போது 80 லோடாக அதிகரித்துள்ளது. அதனால் தக்காளி விலை கிலோ ரூ.5 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனால் நாங்களும் போதிய லாபம் வைத்து விற்க முடியவில்லை. தக்காளி விலை வீழ்ச்சி யால் எங்களுக்கு வருவாய் இழப்புதான் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT