Last Updated : 31 Jul, 2014 11:35 AM

 

Published : 31 Jul 2014 11:35 AM
Last Updated : 31 Jul 2014 11:35 AM

கச்சத்தீவை முற்றுகையிடும் தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை: இலங்கை ராணுவம் எச்சரிக்கை

கச்சத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் ருவன் வணிகசூரிய எச்சரித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கடந்த இரண்டு மாதங்களில் கைப்பற்றப்பட்ட 62 படகுகளையும், சமீபத்தில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் வாடும் 94 தமிழக விடுதலைச் செய்யக் கோரியும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டிணம் மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கடந்த திங்கள்கிழமை மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளின் உரிமத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தையும் நடத்தினர்.

தமிழக மீனவர்களின் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 2-ம் தேதி வெள்ளைக் கொடியுடன் கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டதையும் ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொழும்பில் புதன்கிழமை மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், கச்சத்தீவு முற்றுகை போராட்டம் தொடர்பாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் ருவன் வணிகசூரிய கூறும்போது, "இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள், இலங்கையின் பாதுகாப்பு கருதி தடுத்து நிறுத்தப்படுவார்கள். இதற்காக கச்சத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படை வீரர்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இந்திய மீனவர்கள் கச்சத்தீவை முற்றுகையிடுவது தொடர்பாக எச்சரிப்பது புதிதல்ல. சர்வதேச சட்டத்தை மீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை மனிதாபிமானமற்ற செயல் என்று எவரும் கூற முடியாது" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x