Published : 10 Jan 2018 03:20 PM
Last Updated : 10 Jan 2018 03:20 PM
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழையை பொருத்தவரை தென் தமிழகம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
சென்னையின் சில பகுதிகளில் சிலமுறை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்றை பொருத்தவரை தென் தமிழக கடலோர மாவாட்டங்களில் கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிகளில் சற்று எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 10 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, ஸ்ரீமுஷ்ணம் திருவையாறு 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்து உள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்துவிடும்.”
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT