

திருப்பூர்: தீபாவளி பண்டிகை விடுமுறையை தொடர்ந்து, சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் பெரும்பான்மையானோர் நேற்று திருப்பூர் திரும்பினர்.
திருப்பூர் மாநகரில் பின்னலாடை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்கள் நிறுவனங்களிலேயே தங்கிப் பணியாற்ற தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதால், தொழிலாளர்கள் பல மாதங்கள் தொடர்ந்து திருப்பூரில் தங்கிப் பணியாற்றுகின்றனர்.
தீபாவளி, தேர்தல் நேரம் மற்றும் சொந்த ஊரில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்கள், ஹோலி பண்டிகை தருணங்களில் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 12-ம் தேதி தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் சென்ற வடமாநிலத் தொழிலாளர்கள் நேற்று ரயில்கள் மூலம் திருப்பூர் திரும்பினர். இதனால், திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நாளை முதல் பணி...: வடமாநிலத் தொழிலாளர்கள் கூறும்போது, “தீபாவளி பண்டிகைக்காக பிஹார், ஒடிசா, மத்தியபிரதேசம், உத்தர பிரதேசம்,ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சொந்த ஊர்களுக்குச் சென்றோம். இரண்டு வார விடுமுறைக்குப் பிறகு தற்போது திருப்பூர் திரும்பிஉள்ளோம். கொஞ்சம் ஓய்வுக்கு பின்னர், நாளை (நவ.27) முதல்மீண்டும் பணிக்குத் திரும்புவோம்” என்றனர்.