Published : 24 Nov 2023 05:45 AM
Last Updated : 24 Nov 2023 05:45 AM

பதவி உயர்வுக்கு பிறகும் கணக்கீட்டு பணி: மின்வாரியத்துக்கு தொழிற்சங்கங்கள் கண்டனம்

சென்னை: மின்வாரியத்தில், வருவாய் மேற் பார்வையாளராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்ட பிறகும், மின் கணக்கீட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு அவர்களை அறிவுறுத்திய நிர்வாகத்துக்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக வாரிய தலைமைக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் பொதுச்செயலாளர் ஏ.சேக்கிழார் ஆகியோர் தனித்தனியே கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது: மின்வாரிய கணக்கீட்டு ஆய்வாளர்கள் 200 பேருக்கு வருவாய் மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கணக்கீட்டு பிரிவில் ஆரம்பக்கட்ட பதவிகளான 7 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும், நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது. ஏற்கெனவே, கணக்கீட்டாளர்களுக்கு ஆய்வாளர் பதவி வழங்கும்போது மின் கணக்கீட்டு பணியை கூடுதலாக பார்க்கச் சொல்லி நிர்ப்பந்திக்கப்பட்டது. கைவிட வேண்டும் தற்போது வருவாய் மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்கிய பிறகும், கணக்கீட்டுப் பணியை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுவது முத்தரப்பு ஒப்பந்தத்துக்கு எதிரானது. எனவே, பதவி உயர்வு தொடர்பான உத்தரவில் கணக்கீட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பான அறிவுறுத்தலைக் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x