தி.மலை மகா தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கி 25 பக்தர்கள் காயம்

தி.மலை மகா தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கி 25 பக்தர்கள் காயம்
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டிய மகா தேரோட்டத்தின்போது, மின்சாரம் தாக்கி 25 பக்தர்கள் காயம் அடைந்தனர்.

பத்து நாள் உற்சவத்தின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் இன்று (நவம்பர் 23) நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில், திருத்தேரில் விநாயகர் எழுந்தருளினார். பின்னர் காலை 7.41 மணியளவில் விநாயகர் திருத்தேர் புறப்பாடு தொடங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாட வீதியில் வலம் வந்து, காலை 11.39 மணியளவில் நிலையை வந்தடைந்தது.

பின்னர், வள்ளி தெய்வானை சமேத முருகரின் திருத்தேர், முற்பகல் 11.55 மணியளவில் புறப்பட்டது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இத்திருத்தேர் 4.30 மணியளவில் நிலையை வந்தடைந்தது.

அண்ணாமலை திருத்தேர் புறப்பட்டு நகர்ந்தபோது, நகர குற்றப்பிரிவு காவல் நிலையம் எதிரே உள்ள கடைகளில் இருந்த பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அலறியடித்து, மாடியில் இருந்து சிலர் குதித்தனர். முதல் மாடியில் இருந்த ஒருவர், தனது குழந்தையை கீழே இருந்தவரிடம் தூக்கி வீசினார். பலர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பழக்கடை மற்றும் துணிக்கடைகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட சுமார் 25 பக்தர்களில் சிலர் மட்டும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 20 நிமிடம் தேரோட்டம் தடைப்பட்டன. இதனால், 30 நிமிடங்கள் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

பின்னர், மாலை 5.06 மணியளவில் அண்ணாமலையார் திருத்தேர் புறப்பட்டது. மாட வீதியில் மெல்ல மெல்ல அசைந்தாடியபடி சென்றபோது, ''ஓம் நமசிவாய, அண்ணாமலையாருக்கு அரோகரா'' என பக்தர்களின் முழக்கம், விண்ணைப் பிளந்தது. மாட வீதியில் வலம் வந்த பெரியத் தேரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வணங்கினர். பெரியத் தேர், நிலையை வந்தடைய நீண்ட நேரமானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in