

தருமபுரி: தருமபுரி நகரில் இயங்கும் தேநீர் கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட வடையில் பல்லி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி நகரில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் செயல்படும் தேநீர் மற்றும் பலகாரங்கள், சிற்றுண்டிகள் ஆகிய வற்றை விற்பனை செய்யும் ஒரு கடையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட மெது வடை ஒன்றில் பல்லி இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. சண்முகம் என்ற வாடிக்கையாளர் நேற்று அந்தக் கடையில் மெதுவடை ஒன்றை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
அப்போது அதில் பல்லி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் தன் நண்பர்களுடன் இணைந்து அந்த கடை உரிமையாளரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பிய அவர் அந்த காட்சிகள் அனைத்தையும் வீடியோ பதிவாக்கி சமூக வலைத் தளங்களில் பதிவிட்டார். மேலும், உடல் நல பாதிப்பை தவிர்க்கும் வகையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றார்.
வடையில் பல்லி இருந்த தகவலை அறிந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக அந்தக் கடைக்கு சென்று ஆய்வு செய்ததுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தருமபுரி நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.