Published : 10 Jan 2018 09:28 AM
Last Updated : 10 Jan 2018 09:28 AM

பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கக் கோரி தனியார் வங்கி முன்பு விவசாயிகள் போராட்டம்

பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கி முன்பு விவசாயிகள் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

2016-17-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சிக்காக மத்திய, மாநில அரசுகள் பயிர்க் காப்பீட்டுத் தொகையை தனியார் வங்கிகள் மூலம் வழங்கின. அதில் ஒரு தனியார் வங்கி மட்டும் கோடிக்கணக்கான ரூபாயைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கி முன்பு விவசாயிகள் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்துக்கு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் தலைமை தாங்கினார். புவனகிரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ அப்துல்நாசர் முன்னிலை வகித்தார்.

விவசாயிகள், தலையில் முக்காடு போட்டுக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியபடி, வங்கி நிர்வாகத்துக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் கூறியது:

பயிர்க் காப்பீடு வழங்குவது தொடர்பாக அரசும் இந்த தனியார் வங்கியைச் சேர்ந்த நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் பயிர்க் காப்பீட்டுத் தொகை முழுவதையும் இந்த வங்கி வழங்காவிட்டால் நாங்கள் காப்பீட்டுத் தொகையை பெற முடியாமல் போய்விடும். கடலூர் மாவட்டத்தில் நெற்பயிருக்கு மட்டும் ரூ.12 கோடி தர வேண்டும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிவகங்கை, கடலூர், திருப்பூர், சேலம் உட்பட 8 மாவட்டங்களில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியுள்ளது. இத்தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்த வங்கி முன்பு ஏற்கெனவே போராட்டம் நடத்தினோம். அப்போது ஜனவரி 4-ம் தேதிக்குள் எங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்திவிடுவதாக உறுதி அளித்தனர். அதன்படி பணம் கொடுக்கவில்லை. இந்த வங்கி காப்பீட்டுத் தொகையை வழங்கும் வரை இப்போராட்டம் தொடரும் என்றார். இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x