Published : 21 Nov 2023 05:17 AM
Last Updated : 21 Nov 2023 05:17 AM

தமிழகத்தில் நவ.24 வரை பரவலாக மழை பெய்யும்: சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும். சில மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியவானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாகவும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. வரும் 24-ம்தேதி வரை 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி, மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று (நவ. 21) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. வரும் 23-ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். வரும் 24-ம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

நவ. 20-ம் தேதி (நேற்று) காலை8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 16 செ.மீ., சாத்தான்குளத்தில் 12 செ.மீ., திருச்செந்தூரில் 11 செ.மீ., காயல்பட்டினம், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து ஆகிய இடங்களில் 9 செ.மீ., காக்காச்சி, மாஞ்சோலையில் 8 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், திருநெல்வேலி மாவட்டம் கொடுமுடியாறு அணை,ராதாபுரம், நாலுமுக்கு, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கடந்த அக்.1 முதல் நவ.20-ம் தேதி வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 25 செ.மீ.மழை கிடைத்துள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 30 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x