

சென்னை: அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கு நிதித்துறை ஒப்புதல் அளிக்கவில்லை என ஓய்வூதியர்களிடம் போக்குவரத்து துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறைச் செயலர் பணீந்திர ரெட்டியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு நிர்வாகிகள் அண்மையில் சந்தித்து பேசினர். அப்போது, கடந்த அக். 6-ம் தேதி சந்திப்பின்போது தீபாவளிக்குள் அகவிலைப்படி உயர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்துத் துறை செயலர் உறுதியளித்ததை சங்க நிர்வாகிகள் சுட்டி காட்டினர்.
அதற்கு துறைச் செயலர் கூறியதாவது: கடந்த 10-ம் தேதி சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதையொட்டி, அகவிலைப்படி உயர்வு வழங்க நிதித்துறையிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது. ஆனால் நிதித்துறை ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டதால் அகவிலைப்படி உயர்வை அமல்படுத்த முடியவில்லை. அதே நேரம், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 16 சங்கங்கள் ஒன்றிணைந்து மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.