Published : 02 Jan 2018 07:52 PM
Last Updated : 02 Jan 2018 07:52 PM

ரயிலில் படியில் பயணம் செய்பவர்களே உஷார்! வருகிறது வீடியோ குழு: சீசன் டிக்கெட் ரத்து

மின்சார ரயிலில் படியில் பயணம் செய்யும் பயணிகள், மாணவர்களை வீடியோ எடுத்து பயண சலுகை அட்டையை ரத்து செய்ய ரயில்வே பாதுகாப்பு காவல்துறை முடிவு செய்துள்ளது.

சென்னை புறநகர் ரயில்களில் படியில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை தடுக்கும் வகையில் படியில் பயணம் செய்பவர்களை வீடியோ படம் எடுத்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. காஞ்சிபுரம் ,திருவள்ளூர், சென்னையில் வீடியோ எடுக்கும் பணி துவங்கியுள்ளது.

படியில் தொங்கிச் செல்பவர்களை வீடியோ எடுத்து படத்தில் உள்ள முகத்தை, ரயில்வே பாஸ் பட்டியலில் ஒப்பிட்டு பார்த்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர். படியில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் வீடியோவை கல்லூரிக்கு அனுப்பி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் புதிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே பாதுகாப்பு படை சென்னை கோட்ட பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன் கூறியதாவது:

''கடந்த 2017-ம் ஆண்டு படியில் பயணம் செய்த 7627 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில் பெரும்பான்மையானவர்கள் மாணவர்கள். கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 6500 வழக்குகள் படியில் பயணம் செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு இது 7627 வழக்குகளாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக சென்னை- அரக்கோணம் மார்க்கத்தில் 40 சதவீத மாணவர்கள் படியில் பயணம் செய்கின்றனர். சென்னை -கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 32 சதவீதம் பேரும், சென்னை- செங்கல்பட்டு மார்க்கத்தில் 28 சதவீதம் பேரும் படியில் பயணம் செய்கின்றனர்.

தொடர்ந்து படியில் பயணம் மேற்கொள்பவர்களை கண்கானிக்க 8 சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சாதாரண உடையில் ரயில் பயணம் செய்யும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை கண்காணிப்பார்கள்.

படியில் பயணம் செய்பவர்களை ரகசியமாக வீடியோ எடுப்பார்கள். அதன் மூலம் தங்களிடம் ஏற்கெனவே உள்ள புகைப்படப் பட்டியலுடன் ஒப்பிட்டு அவர்களின் சலுகை அட்டையயை ரத்து செய்ய தென்னக ரயில்வே துறைக்கு பரிந்துரை செய்ய உள்ளோம்.

மேலும் படியில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்திடம் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

ஓடும் ரயில்களின் மீது கல்லெறியும் சம்பவங்களில் சிறுவர்களும், போதை ஆசாமிகளும் ஈடுபடுவதாகவும் அதைத் தடுக்க சோதனை முறையில் சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து குடிப்பவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதால் அதைத் தடுப்பதற்கு போலீஸ் ரோந்து வாகனம் போல் தண்டவாளங்கள் அருகே நடைபெறும் குற்ற சம்வங்களை கண்காணிக்க ரோந்து ரயில் என்ஜினை விரைவில் பயன்படுத்த உள்ளோம்.''

இவ்வாறு லூயிஸ் அமுதன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x