Published : 13 Jan 2018 09:37 AM
Last Updated : 13 Jan 2018 09:37 AM

கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீரின் அளவு விநாடிக்கு 2,150 கன அடியாக அதிகரிப்பு

சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடும் கிருஷ்ணா நதி நீரின் அளவு விநாடிக்கு 2,150 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆந்திர அரசு, சென்னையின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் இரு கட்டங்களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடுகிறது. கடந்த 2016-ல் அக். 10 முதல், 2017 மார்ச் 23 வரை சில கட்டங்களாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

பிறகு கண்டலேறு அணையின் நீர் இருப்பு குறைந்ததால், கிருஷ்ணா நதி நீர் திறந்துவிடப்படவில்லை. சமீபத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையால், தற்போது கண்டலேறு அணையில் போதிய நீர் இருப்பு உள்ளது.

எனவே, சென்னையின் குடிநீர் தேவைக்காக தண்ணீரை திறந்துவிடும்படி, ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதையடுத்து, 9 மாதங்களுக்குப் பிறகு, கண்டலேறு அணையில் இருந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி கிருஷ்ணா நதி நீர் திறந்துவிடப்பட்டது. அப்போது, விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி என்ற அளவில் திறந்துவிடப்பட்ட நீர் தமிழக எல்லையான தாமரைக்குப்பம்- ஜீரோ பாயின்டுக்கு கடந்த 1-ம் தேதி காலை வந்தது. பிறகு, பூண்டி ஏரிக்கு 2-ம் தேதி வந்தடைந்தது.

இந்நிலையில், திறந்துவிடப்படும் கிருஷ்ணா நதி நீரின் அளவு தற்போது விநாடிக்கு 2,150 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் நிலவரப்படி, ஜீரோ பாயின்ட்க்கு விநாடிக்கு 275 கனஅடியாக கொண் டிருக்கிறது.

கிருஷ்ணா நதி நீர் வருகையால் 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் நேற்று காலை நிலவரப்படி 1,096 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இதிலிருந்து, விநாடிக்கு 26 கன அடி நீர், சென்னையின் குடிநீர் தேவைக்காக புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x