Published : 22 Jan 2018 11:23 AM
Last Updated : 22 Jan 2018 11:23 AM
உணவு வணிகர்கள் உரிமம் கோரி விண்ணப்பிக்கும்போது அதற்குரிய கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் உரிமம், பதிவுகள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தள்ளுவண்டி கடைகள், சிறு, குறு வணிகர்கள், ஓட்டல்கள், 5 நட்சத்திர விடுதிகள் என உணவு வணிகம் செய்வோர் அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்றிதழைப் பெற வேண்டும். இதற்காக மாநில உணவு பாதுகாப்புத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு குறைவாக வணிகம் செய்யும் உணவு வணிகர்கள் ரூ.100 செலுத்தி பதிவுச் சான்றிதழை அந்தந்த பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கும் மேல் வணிகம் செய்யும் செய்யும் சிறு வணிகர்கள், உணவு விடுதிகள் உரிமக் கட்டணமாக ரூ.2 ஆயிரமும் உணவு தயாரிப்பாளர்கள் ரூ.3 ஆயிரமும் 3 நட்சத்திர உணவு விடுதிகள் ரூ.5 ஆயிரமும் செலுத்தி மாவட்ட நியமன அலுவலரிடம் உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பங்களை www.foodlicensing.fssai.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். முன்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற வங்கியில் மட்டுமே பணம் செலுத்த முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது www.foodlicensing.fssai.gov.in என்ற இணையதளத்தில், வணிகர்கள் User name, Password உருவாக்கி Login செய்து இணையதள வங்கி சேவை மூலமாகவும் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி யும் பணம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ‘நியமன அலுவலர் அலுவலகம், எண்.33, மேற்கு ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை-15’ என்ற முகவரியிலும், 044-23813095 என்ற தொலைபேசி எண்ணிலும் வார வேலை நாட்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT