Published : 18 Jan 2018 07:44 PM
Last Updated : 18 Jan 2018 07:44 PM

வரும் 29-ம் தேதி தமிழகம் முழுவதும் தமாகா ஆர்ப்பாட்டம்: ஜி.கே.வாசன் அறிவிப்பு

விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பிரச்சினை உட்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தமாகா சார்பில் வரும் 29-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் உள்ள தமாகாவின் 78 மாவட்டத் தலைநகரங்களில் வரும் 29-ம் தேதி தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் உள்ளூர் பிரச்சினைகளை மையமாக வைத்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்தியும் நடத்தப்பட உள்ளது.

குறிப்பாக, குடிநீர் வசதி, சாலை வசதி, ரேஷன் பொருட்கள் வழங்குவதில் உள்ள குறைபாடுகள், மணல் தட்டுப்பாடு, விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் மீனவர் பிரச்சினைகள் போன்ற பல்வேறு முக்கிய பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.

தமாகா மாவட்டத் தலைவர்கள் தலைமையில் அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்ள உள்ளேன்'' என்று வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x