Published : 29 Jan 2018 09:43 AM
Last Updated : 29 Jan 2018 09:43 AM

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர் 12 பேர் கைது

ராமேசுவரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று அதிகாலை சில படகுகள் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது ரோந்துக் கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த, ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளையும், அவற்றில் இருந்த 12 மீனவர்களையும் சிறைபிடித்துச் சென்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட படகு தங்கச்சிமடத்தைச் சேர்ந்த டிக்ரோஸ் மற்றும் சிபிசன் ஆகியோருக்கு சொந்தமானது. இப்படகுகளில் சென்ற டினோகர்(30), பிரைட்டன்(20), ஆரோக்கியதாஸ்(37), விஜயகுமார் (36), சந்தியாரோனக்ஸ்(20), ரோம்லிஸ்(28), ராஜ்(25), ரீகன்(36), இமான்(20), பிரியன்ரோஸ் (38), ஸ்ரீவாக் (21), லவ்சன் (32) ஆகிய 12 மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 12 மீனவர்களையும், தலைமன்னார் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி அவர்களை பிப். 8-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனையடுத்து மீனவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை அரசால் புதிதாக இயற்றப்பட்ட வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டம், நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது போடப்படவில்லை என மன்னார் மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று வரை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 129 மீனவர்கள் அந்நாட்டு சிறைகளில் உள்ளனர். 177 விசைப்படகுகளும் இலங்கை வசம் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x