Published : 29 Jan 2018 09:28 AM
Last Updated : 29 Jan 2018 09:28 AM

காவல்துறை முன்னாள் டிஜிபி பாலச்சந்திரன் காலமானார்

காவல்துறை முன்னாள் டிஜிபி பாலச்சந்திரன் (67) நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.

1974-ல் ஐபிஎஸ்-ஆக தேர்வானவர் பாலச்சந்திரன். அதே ஆண்டில் ராமநாதபுரம் ஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். பின்னர், பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றியுள்ளார். மதுரை காவல் ஆணையராகவும், சிபிஐ பிரிவிலும் பணி செய்துள்ளார். கடலோர காவல் குழுமத்திலும் பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபியாக பதவி வகித்துள்ளார். 2010-ல் ஓய்வுபெற்றார். இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு அவர் காலமானார். பாலச்சந்திரனுக்கு அம்ரீதா அலுவாலியா என்ற மனைவியும், மீனாட்சி யோகினி என்ற மகளும் உள்ளனர். அவரது உடலுக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பாலச்சந்திரன் குறித்து காவல்துறையினர் கூறும்போது, “காவல்துறையில் நேர்மையான அதிகாரியாக பாலச்சந்திரன் இருந்தார். தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது அவரது மனைவியின் கார் ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் வந்தது. ஆனால் பாலசந்திரன் அதற்கு மறுப்பு தெரிவித்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், பாலச்சந்திரனின் பள்ளி நண்பர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x