Published : 15 Nov 2023 06:55 PM
Last Updated : 15 Nov 2023 06:55 PM

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நல பாதிப்பு: ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இந்த விசாரணை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல், கடந்த அக்டோபர் 20-ம் தேதியுடன் முடிவைடந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதைத் தொடர்ந்து, அவரது நீதிமன்ற காவலை நவம்பர் 6-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் நவ.20 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவ.6-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து அவரது நீதிமன்றக் காவலை நவம்பர் 22-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பது இது 10-வது முறையாகும்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் சமயங்களில், மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சையளிப்பது வழக்கம். ஏற்கெனவே ஒருமுறை உடல்நலக்குறைவு காரணமாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கழுத்துப் பகுதியில் வலி மற்றும் உடல் வலி காரணமாக, அமைச்சர் செந்தில் பாலாஜி புதன்கிழமை மாலை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவரால் எழுந்த நடக்கமுடியாத காரணத்தால், சக்கர நாற்காலியில் அமரவைத்து போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, இன்று இரவு அல்லது நாளை காலை மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x