Last Updated : 15 Nov, 2023 06:26 PM

 

Published : 15 Nov 2023 06:26 PM
Last Updated : 15 Nov 2023 06:26 PM

நியோ மேக்ஸ் மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

நியோ மேக்ஸ் நிறுவனம் | கோப்புப் படம்.

மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

மதுரையைச் தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோ மேக்ஸ். இந்த நிறுவனம் கூடுதல் வட்டி மற்றும் வீட்டடிமனை தருவதாக கூறி பல்வேறு போலி நிறுவனங்கள் பெயரில் பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயசங்கரேஸ்வரன் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் நியோமேக்ஸ் நிறுவனர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பாலசுப்பிரமணியம் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், நியோ மேக்ஸ் மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி பாலசுப்பிரமணியன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், 'புகார்தாரரின் தந்தை தான் நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அவர் முதலீடு செய்த பணத்துக்கு உரிய இடத்தை பதிவு செய்ய முயற்சிகள் நடந்தது. நிர்வாக சிக்கல் காரணமாக அதில் தாமதம் ஏற்பட்டது. அதுவரை காத்திருக்காமல் சங்கரேஸ்வரன் புகார் அளித்துள்ளார். பின்னர் அவருக்கும், அவரது பெற்றோருக்கும் வழங்க வேண்டிய பணம் மற்றும் சொத்துக்கள் பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவருடைய பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வழக்கை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். எங்கள் நிறுவனத்தின் வங்கி கணக்குகள், சொத்துக்களை முடக்கியுள்ளனர். இதனால் பிற முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து புகார்தாரர்கள் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், ''மனுதாரரின் முன்ஜாமீன் மனுக்கள் இரு முறை தள்ளுபடியாகியுள்ளது. தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். தலைமறைவு குற்றவாளிகள் வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்ய சட்டத்தில் இடமில்லை. இதை உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உறுதிப்படுத்தியுள்ளது. விசாரணை தொடக்க நிலையில் தான் உள்ளது. பலர் தலைமறைவாக உள்ளனர். தொடர்ந்து புகார்கள் வந்த கொண்டிருக்கிறது'' என்றார். இதையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x