Published : 22 Jan 2018 12:37 PM
Last Updated : 22 Jan 2018 12:37 PM

எடப்பாடி பழனிசாமி அரசு இன்னும் 30 நாட்கள் தான் இருக்கும்: முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கருத்து

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு இன்னும் 30 நாட்கள் தான் இருக்கும் என முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

எம்எல்ஏ டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் வரும் 29-ம் தேதி எம்ஜிஆரின் 101-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் கரூரில் நேற்று நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:

ஆர்கே நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு டிடிவி.தினகரன் வெற்றி பெற்றது போல, அடுத்து வரும் உள்ளாட்சி, சட்டப்பேரவை, மக்களவை என எந்தத் தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம்.

ஆர்கே நகர் வெற்றி தொடராது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் நான் ராஜினாமா செய்கிறேன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவரவர் தொகுதிகளில் ராஜினாமா செய்யட்டும். தேர்தல் வரும்போது யார் வெற்றி பெறுகிறார்கள் என பார்ப்போம். அம்மா ஆட்சி எனக்கூறி, பழனிசாமி ஏமாற்றி வருகிறார். பாஜகவின் கிளையாக செயல்பட்டு வருகின்றனர்.

முதல்வரும், முக்கிய அமைச்சர்க ளும் தனியார் பேருந்துகளை வாங்கி உள்ளனர். அவர்கள் பயன்பெறுவதற்காகவே பேருந்து கட்டணம் 100 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு இன்னும் 30 நாட்கள் தான் இருக்கும். வரும் பிப்.24-ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு முன் இந்த துரோக அரசு வீட்டுக்கு அனுப்பப்படும். பின்னர் முதல்வர் சிறைக்கு செல்வார். அதன்பின் டிடிவி.தினகரன் முதல்வராக பதவியேற்பார் என்றார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதில் பதவியை திரும்பப்பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மைனாரிட்டி அரசை தோல்வி அடையச் செய்து வீட்டுக்கு அனுப்புவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x