தங்கல் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்: திருவள்ளூர் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தங்கல் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்: திருவள்ளூர் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தங்கல் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை சட்டத்துக்கு உட்பட்டு அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டைச் சேர்ந்த ராஜ்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘எங்களது கிராமம் வழியாக செல்லும் கொசஸ்தலை ஆற்றின் வழித்தடத்தில் 100 அடி அகலம் கொண்ட தங்கல் கால்வாயும் உள்ளது. இந்த கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக மழைக்காலங்களில் வெள்ள நீர் அடிக்கடி ஊருக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் மழைக்காலங்களில் சமூகநலக் கூடங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் தங்க வைக்கப்படும் அவலம் உள்ளது. மீஞ்சூர் பஞ்சாயத்து யூனியன் தலைவராக உள்ள ஜி.ரவி இந்த கால்வாயில் சுமார் 50 அடி வரை ஆக்கிரமித்து கான்கிரீட் கட்டிடம் கட்டியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த மே 1-ம் தேதி நடத்தப்பட்ட கிராம சபைக் கூட்டத்திலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பிறகும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர். வட்டாட்சியர் மேற்கொண்ட ஆய்வில், அந்த கால்வாயில் ஆக்கிரமித்து கட்டுமானங்கள் கட்டியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கல் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் எஸ்.செந்தில்குமார், எஸ்.ஷர்மிளா ஆகியோர் ஆஜராகி வாதி்ட்டனர். அரசு தரப்பில் மாநில அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, அந்த கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும் என உறுதியளித்தார். அதையடுத்து நீதிபதிகள், அந்த கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in