உபரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு: இணையவழியில் டிச.20-ல் நடைபெறுகிறது

உபரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு: இணையவழியில் டிச.20-ல் நடைபெறுகிறது
Updated on
1 min read

சென்னை: அரசு உதவி பெறும் பள்ளி உபரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு, டிசம்பர் 20-ம் தேதி இணையவழியில் நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2023-24 கல்வி ஆண்டுக்கு மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், உபரி ஆசிரியர்களாக உள்ளவர்கள் தொடர்ந்து அதே இடத்தில் பணிபுரிவதால் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர்.

இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்கள் விவரங்களை பாடம், பதவி வாரியாக பட்டியல் தயார் செய்ய வேண்டும். பணியில்சேர்ந்தவரில் இளையவர் உபரிஆசிரியராக கணக்கில் கொள்ளப்படுவார். கூட்டு மேலாண்மைப் பள்ளிகளாக இருந்தால் அதற்கு உட்பட்ட பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் விவரத்தை நவம்பர் 20-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மேலும், அத்தகைய கூட்டு மேலாண்மை பள்ளிகளுக்கான பணிநிரவலை நவம்பர் 28-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன் விவரங்களை எமிஸ் தளத்தில் நவ.30-க்குள் பதிவேற்ற வேண்டும்.

தொடர்ந்து பணிநிரவல் முடிந்த பின்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் எஞ்சிய உபரி ஆசிரியர்கள் மற்றும் காலிப் பணியிட விவரங்களை டிசம்பர் 5-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும். இந்த தகவல்கள் அடிப்படையில் மாவட்டத்துக்குள் பணிநிரவல் கலந்தாய்வு டிசம்பர் 20-ம் தேதி நடைபெறும். மேலும், மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு சிறப்பு முன்னுரிமையும் வழங்கப்படும். இதில் எந்த புகாருக்கும் இடம் தராதவாறு சிறந்த முறையில் கலந்தாய்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in