Published : 17 Jan 2018 09:19 AM
Last Updated : 17 Jan 2018 09:19 AM

பக்தியுடன் கூடிய தமிழை வளர்க்க வேண்டும்: ஸ்ரீவிஜயேந்திரர் வலியுறுத்தல்

தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும். பக்தியுடன் கூடிய தமிழை வளர்க்க வேண்டும் என காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரர் வலியுறுத்தினார்.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் சென்னபுரி பக்த ஜன சமாஜம் சார்பில் ஸ்ரீஜெயேந்திரர் தமிழ்ப் பாடசாலை 5-ம் ஆண்டு விழா, திருவள்ளுவர் திருநாள், திருமுறை மற்றும் பாவை விழா ஆகிய முப்பெரும் விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது.

விழாவில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஜெயேந்திரர், ஸ்ரீவிஜயேந்திரர் ஆகியோர் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய விஜயேந்திரர், ‘‘தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும் பெரியவர்கள் பல்வேறு தொண்டாற்றியுள்ளனர். தமிழை பிரியத்துடன் வளர்க்க வேண்டும். திடமான தமிழகத்தை உருவாக்க வேண்டும். தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும். பக்தியுடன் கூடிய தமிழை வளர்க்க வேண்டும். வேலைவாய்ப்புக்காக மட்டுமின்றி சேவைக்காகவும் தமிழை வளர்க்க வேண்டும்’’ என்றார்.

‘தெய்வப் புலமை திருவள்ளுவ நாயனார்’ என்ற தலைப்பில் ‘கலைமகள்’ ஆசிரியர் கீழாம்பூர் எஸ்.சங்கர சுப்பிரமணியனும், ‘தேவார திருவாசக உருக்கம்’ என்ற தலைப்பில் டாக்டர் சுதா சேஷையனும் சிறப்புரையாற்றினர். ம.வே.பசுபதி, பனசை அருணா, மகாவித்வான் வே.சிவசுப்பிரமணியன் ஆகியோருக்கு ‘திருமுறைச் செம்மல்’ பட்டமும், பொற்கிழியும் வழங்கப்பட்டன.

மேலும் 40 தமிழறிஞர்களுக்கு தமிழ்ப் புலவர் சான்றிதழும், 20 தமிழ் அறிஞர்களுக்கு செந்தமிழ்ப் புலவர் சான்றிதழும் வழங்கப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, ஸ்ரீஜெயேந்திரர் விஜயம் என்ற நாட்டிய நாடகம் நடந்தது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x