Published : 10 Nov 2023 10:48 AM
Last Updated : 10 Nov 2023 10:48 AM

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை நீடிப்பு: மூலைக்கரைப்பட்டியில் 140 மி.மீ. பதிவு

படம்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் மழை நீடிக்கிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 140 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இரு மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): மூலைக்கரைப்பட்டி- 140, களக்காடு- 65, கொடு முடியாறு- 52, நாலுமுக்கு- 49, காக்காச்சி- 44, சேரன் மகாதேவி- 43, செங்கோட்டை- 42, பாளையங்கோட்டை- 40, அம்பா சமுத்திரம்- 37, குண்டாறு- 34, மாஞ்சோலை- 32, சிவகிரி- 31,

சேர்வலாறு மற்றும் ஊத்து பகுதியில் தலா 27, பாபநாசம்- 20, கருப்பாநதி- 18.5, நம்பியாறு- 17, சங்கரன்கோவில்- 17, திருநெல்வேலி- 16.6, ராதாபுரம்- 15.2, நாங்குநேரி- 15, மணிமுத்தாறு- 13.4, ஆய்குடி- 12, அடவிநயினார்- 10, கடனா மற்றும் தென்காசியில் தலா - 7, ராமாநதி- 6.

அணைகள் நிலவரம்: 143 அடி உச்ச நீர் மட்டம் கொண்ட பாப நாசம் அணை நீர்மட்டம் 91.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 830 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மாவட்டம் முழுக்க பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு பெருமளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி 4.75 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 62.50 அடியாக உயர்ந்திருந்தது. அணைக்கு விநாடிக்கு 548 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

மறுகால் பாயும் நயினார்குளம்: திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மிதமான மழை பதிவானது. நிலத்தடி நீர்மட்டத்தையே நம்பியுள்ள மாநகரின் விரிவாக்கப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது.

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாநகருக்குள் இருக்கும் நயினார் குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்ததால், இக்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணை நீர்மட்டம் 71 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 146 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 40 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. ராமாநதி அணை நீர்மட்டம் 72.75 அடியாகவும், கருப்பா நதி நீர்மட்டம் 64.31 அடியாகவும் உயர்ந்திருந்தது. மாவட்டத்தில் குண்டாறு, கருப்பாநதி, ராமாநதி ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x