இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 38 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 38 தமிழக மீனவர்கள் விடுதலை
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 38 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த அக். 14-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற கென்னடி, பாஸ்கர் ஆகியோரது 2 விசைப் படகுகளையும், அதிலிருந்த 15 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

அதேபோல, அக். 28-ம் தேதி ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற மெக்கான்ஸ், மரிய சியா, ராமகிருஷ்ணன் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளையும், அதிலிருந்த 23 மீனவர்களையும் அந்நாட்டு கடற்படையினர் சிறைபிடித்தனர்.

இந்த 38 மீனவர்கள் மீதும்எல்லை தாண்டுதல், அனுமதியின்றி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை மன்னார் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. மீண்டும் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 38 மீனவர்களையும் விடுவித்து நீதிபதி சஜீத் உத்தரவிட்டார்.

மேலும், சிறைபிடிக்கப்பட்ட விசைப் படகுகளின் உரிமையாளர்கள் வரும் டிச. 13-ம் தேதி உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 38 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in