Published : 09 Nov 2023 05:02 AM
Last Updated : 09 Nov 2023 05:02 AM

‘அதிமுக பெயரை பயன்படுத்த கூடாது’ - தடையை நீக்க கோரி ஓபிஎஸ் மேல்முறையீடு

ஓபிஎஸ்

சென்னை: அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை உடனே விசாரிக்குமாறு முறையிடப்பட்டதால், நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என்று இடைக்கால தடை விதித்து நேற்று முன்தினம் (நவ.7) உத்தரவிட்டார்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகள்ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அமர்வில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் அப்துல் சலீம், பி.ராஜலட்சுமி ஆகியோர் ஆஜராகி, ‘‘தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’’ என்று முறையீடு செய்தனர்.

அதற்கு நீதிபதிகள், ‘‘உரிய நடைமுறைகள் முடிந்துவிட்டால், நவ.10-ம் தேதி (நாளை) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x