கோயம்பேட்டில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது

கோயம்பேட்டில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது
Updated on
1 min read

சென்னை: கோயம்பேட்டில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக இயக்கப்படாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.9, 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாகச் செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்.

இந்த தேதிகளின் நகரத்தின் உட்பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது. எனவே, பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் இருந்து ஆம்னி பேருந்துகளில் ஏறிச் செல்லலாம். கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகள் மட்டும் வழக்கம் போல இயக்கப்படும்.

ஆம்னி பேருந்தில் சங்கம் நிர்ணயித்த கட்டணத்துக்கு மிகாமல், கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டண விவரம் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் சம்பந்தமான புகார்களை 9043379664 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in