Published : 05 Jan 2018 09:03 PM
Last Updated : 05 Jan 2018 09:03 PM

தமிழக அரசின் செயலற்ற தன்மையால் தொழில்துறை வளர்ச்சி முடக்கம்: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிலவும் செயலற்ற தன்மையால் எதிர்ப்பார்த்த முதலீடுகள் கிடைக்காமல் தொழில் துறையின் வளர்ச்சி முடங்கியிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 2015-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக ரூ.100 கோடி செலவில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதன் மூலம் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகும், அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறப்பட்டது. ஆனால், தமிழக அரசின் செயலற்ற தன்மையால் எதிர்ப்பார்த்த அளவுக்கு முதலீடுகள் கிடைக்கவில்லை.

கடந்த 4-ம் தேதி நடந்த தொழில் முனைவோர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி இதுவரை 61 திட்டங்களில் ரூ.62 ஆயிரத்து 738 கோடி முதலீடு கிடைத்து இருப்பதாக கூறினார். ஆனால், உண்மையில் வெறும் 32 ஆயிரத்து 702 கோடி ரூபாய் மட்டுமே முதலீடாக வந்துள்ளது.

இதனிடையே, பொதுப் பணித் துறையின் ஒப்புதல் கிடைக்காமல் ரூ.19 ஆயிரம் கோடி முதலீடும், வருவாய் துறையின் ஒப்புதல் கிடைக்காமல் ரூ.13 ஆயிரம் முதலீடும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளன. இதனால், பல தொழில் முதலீட்டாளர்கள் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலத்துக்கு செல்லும் சூழல் உருவாகி இருக்கிறது. மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்காகவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு எவ்வித முயற்சிகளை எடுக்காததால் தமிழகம் தொழில் வளர்ச்சியில் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x