Published : 03 Jul 2014 09:00 AM
Last Updated : 03 Jul 2014 09:00 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து 2 வாரத்தில் அறிக்கை: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

மவுலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்து குறித்து 2 வாரத்துக்குள் அறிக்கை அனுப்பும்படி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விபத்து குறித்து வந்த ஊடகச் செய்தியை வைத்து தாமாக முன்வந்து இந்தப் பிரச்சினையை கவனத்தில் எடுத்துக் கொண்ட ஆணையம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை அருகே கடந்த 28-ம் தேதி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் ஊடகத்தில் வெளியான செய்தியை தாமாக முன்வந்து கவனத்தில் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், இச்சம்பவம் குறித்து இரண்டு வாரத்துக்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கட்டுமான குறை பாடுகளாலும், கட்டுனரின் பல்வேறு விதிமீறல்கள் காரணமாகத்தான் இந்த விபத்து நடந்துள்ளது என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டதாக ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக செய்தியில் உள்ள தகவல்கள் உண்மையாக இருந்தால், இந்த விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விஷயத்தில் கடுமையான மனித உரிமை மீறல் நடந்துள்ளது என்று ஆணையம் கருதுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x