Published : 07 Nov 2023 07:52 AM
Last Updated : 07 Nov 2023 07:52 AM

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக வருமானவரித் துறை சோதனை

சென்னை: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. அப்போது, வங்கி லாக்கரில் தொழில் முதலீடு ஆவணங்கள் கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கடந்த 3-ம் தேதி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை ஆழ்வார்ப்பேட்டை, கோட்டூர்புரம், தி.நகர், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் எ.வ.வேலு வீடு, அவரது மகன் கம்பன், உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று 4-வது நாளாக சோதனை நடத்தினர்.

இதேபோல் செனாய்நகர், வேப்பேரி, அண்ணாநகர் மேற்கு, புரசைவாக்கத்தில் உள்ள பொதுப்பணிகள் துறை ஒப்பந்ததாரர்கள், பைனான்சியர்கள் வீடுகளிலும் 4-வது நாளாக நேற்று சோதனை நடைபெற்றது. மேலும், திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் தலைமை அலுவலகம், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் வீடுகளிலும், தி.நகரில் உள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலகம், நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, அந்நிறுவனத்துக்கு சொந்தமான ஓட்டல்கள், ஊழியர்கள் வீடுகள் என சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.

திருவண்ணாமலையில் எ.வ.வேலு வீடு, அவரது மகன் கம்பன் வீடு, கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் அருணை வெங்கட் வீடு மற்றும் அலுவலகம் உட்பட 20 இடங்களில் நடைபெற்று வரும் சோதனை 4-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்நிலையில், தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடியில் வசிக்கும் கம்பி வியாபாரி ஜமால், நெல் - அரிசி வியாபாரி முருகேசன் ஆகியோரது வீடு, அலுவலகம் மற்றும் கிடங்குகளில் நடைபெற்ற வந்த சோதனை நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அமைச்சர் எ.வ.வேலுவின் மகன்கள் கம்பன், குமரன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வங்கி லாக்கர்களையும் வருமானவரித் துறையினர் சோதனையிட்டுள்ளனர். இதில், தொழில் முதலீடு சார்ந்த ஆவணங்கள் மற்றும் தரவுகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதேபோல், கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஜெயக்குமாரின் இல்லம், இவரது மகன் ராமுக்கு சொந்தமாக பீளமேட்டில் உள்ள உணவு மற்றும் கட்டுமானம் சார்ந்த நிறுவனம், சவுரிபாளையத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று 4-வது நாளாக சோதனை நடக்கிறது.

கட்டுமான நிறுவனத்தில் இயக்குநராக முன்பு பணியாற்றிய ஒருவரின் வீடு சிங்காநல்லூரில் உள்ளது. இங்கும் வருமானவரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலு வீடு, தொடர்புடைய இடங்கள், காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் 4-வது நாளாக நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு ஆவணங்கள், கணக்கில் வராத பல கோடி மதிப்பிலான கட்டண ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் வருமானவரித் துறை சார்பில் தெரிவிக்கப்படவில்லை. வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே முழு விவரங்களையும் வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x