ஐகோர்ட் விசாரணைக்கு தடை கோரிய அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

அமைச்சர் பொன்முடி | கோப்புப்படம்
அமைச்சர் பொன்முடி | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்கு விசாரணைக்கு தடை கோரி அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து, இதுதொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் தனக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கோரியும், இடைக்காலத் தடை கோரியும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு நன்றி. அமைச்சருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை நீதிபதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சரிதான்.

இதில், மனுதாரருக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், இந்த வழக்கு தனிநீதிபதி முன்பு விசாரணைக்கு வரும்போது, அதை தெரிவித்துக் கொள்ளலாம், எனக்கூறி, அமைச்சர் பொன்முடி மற்றும அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in