தமிழகத்தில் நவ.8 வரை கனமழை நீடிக்க வாய்ப்பு: வால்பாறையில் 13 செ.மீ. மழை

தமிழகத்தில் நவ.8 வரை கனமழை நீடிக்க வாய்ப்பு: வால்பாறையில் 13 செ.மீ. மழை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகரைவிட, புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. வரும் நாட்களிலும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைகண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வடதமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று (நவ. 6) முதல் 10-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும், 11-ம் தேதி ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மேற்கண்ட மாவட்டங்கள் மற்றும் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், வரும் 8-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவ. 5 (நேற்று) காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 13 செ.மீ., தேனி மாவட்டம் வீரபாண்டி, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in