

சென்னை: சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கான வேக வரம்புகளை மீறியதாக நேற்று (சனிக்கிழமை) மட்டும் 120 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள வேகவரம்பு கட்டுப்பாடு குறித்து போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் இன்று (நவ.5) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "சென்னையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாட்டை நிர்ணயிக்க, ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, பாதுகாப்பு அதேசமயம் வேகமாக பயணிப்பது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கியது.
அந்தப் பரிந்துரைகள், போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு, நவ.1ம் தேதி பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டு, நேற்று (நவ.4) முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, புதிய வேக வரம்பு கட்டுப்பாடு, லகுரக மோட்டார் வாகனங்களுக்கான வேக வரம்பு 40 கி.மீட்டரிலிருந்து 60 கி.மீட்டராக மாற்றப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கான வேக வரம்பு 30 கி.மீட்டரிலிருந்து 50 கி.மீட்டராக மாற்றப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களுக்கு 50 கி.மீ, ஆட்டோக்களுக்கு 40 கி.மீ, என வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. சிறிய வீதிகளைக் கொண்ட குடியிருப்புப் பகுதிகளுக்கு 30 கி.மீ என வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டு, நேற்று முதல் பெருநகர சென்னை காவல்துறைக்குட்பட்ட பகுதிகளில் இந்த வேக வரம்பு கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. சென்னை மட்டுமல்ல, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களின் வேக கட்டுப்பாடு வரம்பு என்ன? அவர்கள் நிர்ணயித்துள்ள வேக வரம்பு குறித்து ஆய்வு செய்தோம். எங்களது குழுவுடன், ஐஐடி குழுவும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டு வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் வேக வரம்பு கட்டுப்பாட்டை மீறி வாகனம் ஓட்டியதாக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நவீன கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்பட்டது. அதில் அதிவேகமாக செல்பவர்கள் ரேடார் மூலம் கண்டறியப்படுகின்றனர். அதற்கான வசதிகள் நம்மிடம் உள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், இந்த வேக வரம்பு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, இந்த கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.