Published : 05 Nov 2023 07:49 AM
Last Updated : 05 Nov 2023 07:49 AM

தமிழக மீனவர்கள் 8 பேரை தாக்கி ரூ.2 லட்சம் பொருட்கள் கொள்ளை: இலங்கை கடல் கொள்ளையர்கள் மீண்டும் அத்துமீறல்

நாகப்பட்டினம்: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, தமிழக மீனவர்கள் 8 பேரைத் தாக்கி, ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (38). ஃபைபர் படகு உரிமையாளர். இவர்,சக மீனவர்களுடன் கோடியக்கரையில் தங்கி, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

மீனவர்கள் காயம்: இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மதன் (20), சிவக்குமார் (50), நித்திக்குமார் (16) ஆகியோரும் நேற்று முன்தினம் மதியம் கோடியக்கரைக்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை ஒரு படகில் வந்த கடல்கொள்ளையர்கள், செந்தில்குமார் படகில் ஏறி, மீனவர்களைக் கட்டையால் தாக்கி, பேட்டரி, ஜிபிஎஸ் கருவி, டார்ச் லைட் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மீன்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

பின்னர் மீனவர்கள் 4 பேரும் கரைக்குத் திரும்பினர். காயமடைந்த செந்தில்குமார், மதன், சிவக்குமார் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதேபோல, நாகை மாவட்டம் வானவன்மகாதேவி மீனவர்காலனியைச் சேர்ந்த சிதம்பரம் (60), தனது ஃபைபர் படகில், அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (30), முகுந்தன் (18),கிருஷ்ணசாமி (65) ஆகியோருடன் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு கிழக்கே 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த கடல் கொள்ளையர்கள், மீனவர்கள் 4 பேரையும் தாக்கி, 200 கிலோ வலை,ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, செல்போன், டார்ச்லைட் மற்றும் 60 கிலோ மீன்கள் என ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

பின்னர் மீனவர்கள் நேற்று காலை வானவன்மகாதேவி கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். இதுகுறித்து கீழையூர் கடலோரக் காவல் படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இலங்கை கடல் கொள்ளையர்களின் அத்துமீறல்கள், தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x