

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "இசை உலகின் உச்சம் தொட்ட சாதனையாளர், இசைஞானி இளையராஜாவுக்கு, மத்தியஅரசு 'பத்மவிபூஷண்' விருது வழங்கி கௌரவித்திருப்பது பெருமைக்குரியது.
விருது பெற்ற இளையராஜாவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
சமூக அமைப்பின் அடித்தட்டில், மிகவும் ஏழ்மைப்பட்ட இசைக் குடும்பத்தில் பிறந்த இளையராஜாவும், அவரது சகோதரர்களும் இசைப்பயணத்தில் சோர்வறியாது பயணித்து வருபவர்கள்.
குறிப்பாக அவரது மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் கிராம இலக்கியத்தை ஒருங்கிணைத்து, மேடையேற்றி வெற்றி கண்டவர், அரசியல் பரப்புரைக் களத்தில் மறக்க முடியாத இடத்தைப் பெற்றவர்.
அவரைத் தொடர்ந்து இளையராஜா இசை உலகில் எதிர்கொண்ட சவால்களை தாண்டி, திரை உலகில் முன்னேறி சாதனை படைத்தவர். அவரது இசைப் பயணம் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் பெருமை தேடித்தந்துள்ளது. அவர் 'பத்மவிபூஷண்' விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்"
இவ்வாறு முத்தரசன் வாழ்த்தியுள்ளார்.