Published : 04 Nov 2023 04:59 AM
Last Updated : 04 Nov 2023 04:59 AM

வருமான வரி சோதனைக்கு தலைவர்கள் கண்டனம்

கோப்புப்படம்

சென்னை: பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும்வருமான வரித் துறை சோதனைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: நாட்டில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும்வருமானவரித் துறை, அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறுகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களிலோ, கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலோ இதுபோன்ற சோதனைகளை நடத்துவதில்லை. இது எதிர்க்கட்சிகளை நசுக்கும் சர்வாதிகாரமான போக்கு மற்றும் விதிமீறலாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்: மத்தியில் பாஜக அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து எதிர்க்கட்சிகளையும், எதிர் கருத்துக்களையும் ஒடுக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக அமலாக்கத் துறை, வருமானவரித் துறை மற்றும் துணை ராணுவ படைகளையும் பயன்படுத்துகிறது. அந்தவகையில் தமிழகத்தில் திமுகவின் அமைச்சர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்களின் இல்லங்களிலும் வருமானவரித் துறை, அமலாக்கத் துறை சோதனைகள் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது.

தற்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இல்லத்திலும், அலுவலகத்திலும் அத்துமீறி சோதனைகள் நடத்தப்படுகின்றன. இவை யாவும் சட்டத்துக்கும், நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கும் எதிரானது. பாஜக தலைவர்களின் இல்லங்களில் இதுபோல் சோதனைகள் நடத்தப்படுவதில்லை.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் மாணவர் அணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி என பல்வேறு அணிகள் உள்ளன. அதேபோல பாஜகவில் உள்ள அணிகள்தான் வருமானவரித் துறையும் அமலாக்கத் துறையும்.அவர்கள் அவர்களுடைய பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த 2, 3 மாதங்களாகவே இந்த அணிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இவற்றை சட்டப்படி சந்திப்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x