புதுச்சேரி | தியாகிகள் மாதாந்திர உதவித் தொகையை ரூ.12000-ஆக உயர்த்த ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

ஆளுநர் தமிழிசை | கோப்புப் படம்
ஆளுநர் தமிழிசை | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித் தொகை ரூ. 10,000-இல் இருந்து ரூ. 12.000-ஆக உயர்த்தி வழங்க துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி நடைபெற்ற புதுச்சேரி சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது முதல்வர் ரங்கசாமி உறுதியளித்து இருந்ததை அடுத்து, புதுச்சேரி மாநில விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித் தொகை ரூ.10,000 இல் இருந்து ரூ.12.000 ஆக உயர்த்தி வழங்க துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். இந்த உயர்வு 01.11.2023 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

இதன் மூலம் புதுச்சேரியில் 939, காரைக்கால் பகுதியில் 174, மாஹே பகுதியில் 87 ஏனாம் பகுதியில் ஒன்று என மொத்தம் 1201 விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்கள் பயன்பெறும். மாதாந்திர உதவித் தொகை உயர்த்தப்படுவது தொடர்பாக புதுச்சேரி மாநில விடுதலைப் போராட்ட தியாகிகள் மாதாந்திர உதவித் தொகை விதிகள்,1970-ல் திருத்தம் மேற்கொள்ளவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதிய போக்குவரத்துக் கொள்கைக்கு அனுமதி: புதுச்சேரி அரசின் தொழில் மற்றும் வணிகத் துறை மூலமாக புதுச்சேரி மாநிலத்துக்கான புதிய போக்குவரத்துக் கொள்கை - 2023 வெளியிடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி மாநில அமைச்சரவையின் ஒப்புதலோடு உருவாக்கப்பட்ட இந்த கொள்கை, "புதுச்சேரி ஒருங்கிணைந்த போக்குவரத்து உள் கட்டமைப்பு, பல்முனை போக்குவரத்துப் பூங்கா மற்றும் பணிமனைக் கொள்கை 2023" என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in