Published : 04 Jan 2018 10:06 AM
Last Updated : 04 Jan 2018 10:06 AM

பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், பேரணியால் முடங்கியது சிவகாசி: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக நேற்று சிவகாசியில் அனைத்துக்கட்சி சார்பில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், பேரணி நடைபெற்றது. போராட்டத்துக்கு முழு ஆதரவு இருந்ததால், சிவகாசியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகக் கூறி, நாடு முழுவதிலும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசில் 80 சதவீதம் வரை வடமாநிலங்களிலேயே விற்பனையாகும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் வடமாநிலங்களில் இருந்து சிவகாசி பட்டாசை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டவில்லை.

நீதிமன்ற தீர்ப்பு எப்படி வருமோ என்ற அச்சத்தில் தீபாவளிக்காக முன்கூட்டியே வரும் ஆர்டர்கள் ஏதும் வராததால் பட்டாசு உற்பத்தியாளர், வியாபாரிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். தேசிய அளவில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் சிவகாசியில் ஆலோசனை நடத்தினர். பட்டாசு தொழிலைப் பாதுகாக்க அரசு முன்வரவும், வழக்கில் பிரதிவாதியாக சேரவும் வலியுறுத்தப்பட்டது.

இப்பிரச்சினையால், பட்டாசு தொழிலே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்திக்கு தடை கோரிய வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவும், பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்க அனுமதித்து சிறப்பு சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்தியும் கடந்த டிச.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் சிவகாசியில் நடந்து வருகிறது. 850-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் அடைக்கப்பட்டுள்ளதால், 5 லட்சம் தொழிலாளர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அனைத்து கட்சி சார்பில் நேற்று சிவகாசியில் கடையடைப்பு நடந்தது. சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் கடைகள், அச்சகங்கள், உணவகங்கள் பெருமளவில் அடைக்கப்பட்டன. முக்கிய சாலைகள் வெறிச்சோடின.

பஸ் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமை வகித்தனர். கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, காங்கிரஸ் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஞானசேகரன், மாவட்ட தலைவர் ராஜாசொக்கர், மதிமுக மாவட்டச் செயலர் சண்முகசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று மனு அளித்தனர். 8 நாட்களாக நடக்கும் தொடர் வேலைநிறுத்தத்தால் பல கோடி ரூபாய்க்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x