தமிழகத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகள் 4,399-ல் இருந்து 3,770 ஆக குறைந்ததாக அரசு தகவல்

தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமையால் தயாரிக்கப்பட்ட தொலைபேசி கையேட்டை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டார்.
தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமையால் தயாரிக்கப்பட்ட தொலைபேசி கையேட்டை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டார்.
Updated on
2 min read

சென்னை: "தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு வெள்ளத் தணிப்பு பணிகளின் காரணமாக 4,399 ஆக இருந்த பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள், தற்போது 3770 ஆக குறைந்துள்ளது" என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் இன்று (நவ.2) மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு வெள்ளத்தணிப்பு பணிகளின் காரணமாக 4399 ஆக இருந்த பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள், தற்போது 3770 ஆக குறைந்துள்ளது. வெள்ளத்தணிப்பு பணிகளுக்காக 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி, நகராட்சி நிருவாகம் மற்றும் நீர்வள ஆதாரத் துறை ஆகிய துறைகளுக்கு 819.50 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவுரையின் பேரில் வடகிழக்கு பருவமழையை திறம்பட எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • மாநில, மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளுடனும், கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி வருகின்றன.
  • பொதுமக்கள், Whatsapp எண்.94458 69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம்.
  • 424 கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள முன் எச்சரிக்கை அமைப்புகள் மூலம் சைரன் ஒலி, நேரடி ஒளிபரப்பு மூலம் எச்சரிக்கைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட எச்சரிக்கை செய்திகள் பரப்பப்படுகின்றன.
  • பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு புயல், வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு புயல், கனமழை மற்றும் காற்றின் வேகம் குறித்து நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டு அவர்களது பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது.
  • TNSMART செயலி மூலமாகவும், அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு உரிய காலத்தில் வானிலை முன்னறிவிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் மின்னல் எச்சரிக்கை வழங்கப்படுகிறது.
  • 14 கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 65,000 முதல் நிலை மீட்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதோடு, 16 மாவட்டங்களில் ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் 5500 தன்னார்வலர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.
  • அனைத்து மாவட்டங்களிலும், தேடல், மீட்பு உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  • கடலோர மாவட்டங்களில் 1.13 லட்சம் நபர்கள் தங்கும் வகையில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
  • பள்ளிகள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என மொத்தம் 4967 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
  • பெருநகர சென்னை மாநகராட்சி பொறுத்தமட்டில் 169 நிவாரண முகாம்கள் உள்ளதோடு, மழைநீரை வெளியேற்ற 260 பம்புகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
  • பேரிடர் காலங்களில் தேடல், மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 400 வீரர்கள் கொண்ட 12 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
  • மேலும், தேசிய பேரிடர் மீட்புப்படையின் குழுக்கள் அரக்கோணத்திலும், சென்னையிலும் தயார் நிலையில் உள்ளன.

மாவட்ட ஆட்சியர்களுக்கான அறிவுரை: பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளுக்கென பல்துறை மண்டலக் குழுக்கள் அமைத்து கண்காணிக்கவும்; பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை வெளியேற்றும் போது மாற்றுதிறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும்; நிவாரண முகாம்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி, மின்சாரம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும்;பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவும்; மின்கசிவினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும்;பள்ளி மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கவும்; நோய்த்தொற்று பரவலைத் தடுக்கவும்; மருத்துவமனைகளில் போதுமான மருந்து இருப்பு வைக்கவும்; பலவீனமான மற்றும் சேதமடைந்த கட்டடங்களை பொதுமக்கள் பயன்படுத்தாத வகையில் தடுப்பு ஏற்படுத்தி, பாதுகாப்பாக இடித்து அப்புறப்படுத்தவும்; பலவீனமான மரக்கிளைகள், விழும் நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த குடிசை, வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பேரிடர் காலங்களில் தேவையான அலுவலர்களை தொடர்பு கொள்ளும் வகையில் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமையால் தயாரிக்கப்பட்ட தொலைபேசி கையேட்டை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் வெளியிட்டார்.இந்த ஆய்வின் போது கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் வே. ராஜாராமன், பேரிடர் மேலாண்மை இயக்குநர், சி. அ. ராமன், ஆகிய அலுவலர்கள் உடன் இருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in