Published : 22 Jan 2018 09:33 AM
Last Updated : 22 Jan 2018 09:33 AM

ஐ.டி.ஐ மாணவர் கொலையில் வீடியோ ஆதாரம் சிக்கியது: குற்றவாளிகளை தேடும் பணி தீவிரம்

நுங்கம்பாக்கத்தில் ஐ.டி.ஐ மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸாரிடம் வீடியோ ஆதாரம் சிக்கியுள்ளது. அதை அடிப்படையாக வைத்து குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் (18). கிண்டியில் ஐ.டி.ஐ. படித்து வந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தனது நண்பர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்வதாக பெற்றோரிடம் கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளார். பின்னர் இரவு 11.30 மணியளவில் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக போனில் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. அவரது போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ரஞ்சித்தின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர்.

நள்ளிரவில் தனது வீட்டருகே குளக்கரை சாலையோரம் கத்தி குத்து காயங்களுடன் ரஞ்சித் இறந்து கிடந்தார். இதுபற்றி நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் நட்பு விவகாரத்தில் கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஞ்சித் கொலை செய்யப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ரஞ்சித் உயிர் பயத்தில் ஓட்டம் பிடிப்பது பதிவாகி இருந்தது போலீஸாரின் ஆய்வில் தெரியவந்தது. ஆனால் ரஞ்சித்தை விரட்டுபவர்கள் யார் என்பது பதிவாகவில்லை. இது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும், ரஞ்சித்தின் செல்போன் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ரஞ்சித்துடன் கடைசியாக போனில் பேசியது யார்? அடிக்கடி பேசியது யார்? அவர்களில் யாரேனும் கொலையாளிகளாக இருப்பார்களா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் ரஞ்சித்தின் நண்பர்கள் சிலரை தனி இடத்தில் வைத்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x