சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: திருத்தப்பட்ட முடிவு வெளியீடு

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: திருத்தப்பட்ட முடிவு வெளியீடு
Updated on
1 min read

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 4,477 பேர் எழுதினர். தேர்வு முடிவு ஜூன் 13-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற 933 பேருக்கு ஜூலை 1, 2-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருத்தப்பட்ட கீ ஆன்சர் அடிப்படையில் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன. திருத்தப்பட்ட தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தெரிந்துகொள்ளலாம்.

புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 16-ம் தேதி நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம், தன்விவரக்குறிப்பு, அடையாள படிவம் ஆகியவற்றை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் இதற்கு வரத் தேவையில்லை.சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாத மாற்றுத் திறனாளிகள் தங்கள் சார்பில் யாராவது ஒருவரை பங்கேற்கச் செய்யலாம்.

இதற்காக விண்ணப்பதாரர் கையெழுத்திட்டு வழங்கிய அதிகார கடிதத்தை சான்றிதழ் சரிபார்ப்பின்போது அந்த நபர் சமர்ப்பிக்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஏற்கெனவே ஜூலை 1, 2-ம் தேதிகளில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் ஜூலை 16-ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in